புதன், ஜூன் 15, 2011

பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்களை மையப்படுத்திய புதிய பயிற்றுவித்தல் முறை அறிமுகம்


பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்களை மையப்படுத்திய புதிய பயிற்றுவித்தல் முறை அறிமுகம்




சென்னை, ஜூன் 14: 
 
          தமிழகம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களைக் கொண்டு பயிற்றுவிக்கும் முறை எல்லா வகுப்புகளிலும் இந்தக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
        இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 
         சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் தரம் குறைவாக இருப்பதால், மாணவர்களின் கல்வி நலன் கருதி இந்தத் தரத்தை ஆராய்வதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்துள்ளதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் வல்லுநர் குழு அமைத்து சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் தரத்தை ஆராய உத்தரவிட்டுள்ளது. 
 
         இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி புதன்கிழமை எல்லாப் பள்ளிகளும் திறக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். 2005-ம் ஆண்டு தேசிய கலைத் திட்ட வடிவமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆகியவற்றில் குழந்தைகளை மையப்படுத்தி, அவர்கள் எளிமையான முறையில் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கவும், அதன் மூலம் அவர்கள் மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறுபட்டு சொந்தமாக சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் வேண்டும். அதன்படி, "குழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள்' என்ற முறை எல்லா வகுப்புகளிலும் இந்தக் கல்வியாண்டில் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதன்கிழமை பள்ளிகளைத் திறக்கும்போது இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 
 
          இந்தத் திட்டத்தின்படி, பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களைக் கொண்டு வகுப்பறை நடத்தப்படும். இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகுப்புகள் முடியும் தருவாயில் அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான இலவசப் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். 
 
          ஆகவே, கல்வி நிறுவனங்கள் எந்தக் குழப்பத்துக்கும் இடம் கொடுக்காமல் நல்ல முறையில் இந்தக் கல்வியாண்டில், அரசால் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டத்தை கடைப்பிடித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். 
 
          மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு, நல்ல முறையில் கல்வி கற்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் பெற்றொர்களும், மாணவர்களும் எந்தவித குழப்பத்துக்கும் இடம்தர வேண்டாம். மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.
 
கல்லூரிகள் திறப்பு:
 
தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை திறக்கப்பட உள்ளன.
 
நன்றி:- தினமணி 15.06.2011

1 கருத்து:

கருத்துரையிடுக