வியாழன், ஏப்ரல் 02, 2020

‘கொரோனா’ வதந்திகள்: மத்தியதர மனநிலையும் பாடநூல் திருட்டுகளும்


‘கொரோனா’ வதந்திகள்: மத்தியதர மனநிலையும் பாடநூல் திருட்டுகளும்   


 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

   (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 68) 
  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:

ஒரு முன் குறிப்பு:

    நமக்கு சமூக அறிவியல், அறிவியல், தமிழ் உள்ளிட்ட எந்தப் பாடத்திலும் பெரிய புலமையில்லை. ஒரு வாசகனாகப் பாடநூலை எதிர்கொள்ளும்போது ஏற்படும் நெருடல்களை மட்டுமே இங்கு சுட்டிக்காட்டுகிறேன். 

    அறிவியல் பாட ஆசிரியர்களிடம் பேசியபோது சமூக அறிவியல் போல் எந்தச் சிக்கல்களும் இல்லாமல் அறிவியல் பாடங்கள் சிறப்பாக இருக்கின்றன என ஒற்றைவரியில் முடித்துக் கொள்கின்றனர். தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் உள்ள முரண்பாடுகள் ஏதும் அறிவியலில் தோன்ற வாய்ப்பே இல்லை என்பதே இதன் உட்கிடை. 

   ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது. பல வகைகளில் அறிவியல் பாடங்களும் அபத்தக் களஞ்சியங்களாகவே உள்ளன. தரமான நூல்களை வாசித்துப் பாடங்களை எழுதாமல் இணையவெளிப் பெருக்கத்தில் வெட்டி ஒட்டும் வேலைகள் இதற்கு முழுமுதற்காரணம். கணிதவியல் போன்ற பாடங்களையும் அத்துறையில் நிபுணத்துவம் உடையவர்கள் ஆய்ந்து சொன்னால்தான் உண்டு. 




     ‘கொரோனா’ வதந்திகளுக்குப் பஞ்சமில்லை. இன்று ‘கொரானா’ (COVID-19) பெருங்கொள்ளை நோய் (pandemic) என்பதைத்தாண்டி அடையாள அரசியலின் ஓர் அங்கமாக மாற்றப்பட்டது மிகவும் கொடுமையானது. 

   இன்று இலவச Data வுக்கான காலம் மலையேறிவிட்டது. எனவே பணம் போட்டு இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கமே இந்த வதந்திகளுக்கான மையமாக உள்ளது. இந்தப் பிரிவில்தான் மாத ஊதியம் பெறும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் வருவார்கள் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த சமூகத்திற்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய இவர்கள் நாலந்தர வதந்திகளைப் பரப்புவது வேதனைக்குரியது. “மெய்ப்பொருள் கண்பது அறிவு”, என்ற நீண்ட தமிழ் மரபிற்குச் சொந்தக்காரர்கள் இவ்வாறு செயல்படுவதைப் புரிந்துகொள்வது சற்று சிக்கலானதுதான். 

    கோரோஜன மாத்திரையை ‘கோரோனா’ மாத்திரை எனத் திருத்தி 1914 இல் மாத்திரை கண்டுபிடித்து விட்டதாக பெருமை பேசுவதும் இந்த வதந்தியின் ஊடாக நடக்கிறது. மனித ‘கோரோனா’ வைரஸ் 1960 களில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.   இவற்றிற்கு 1914 லேயே மாத்திரை தயாரிப்பவர்கள் கண்டிப்பாக டினோஜர்களுக்கு முந்தைய லெமூரியா வாசிகளாகத்தான் இருக்க முடியும்!

      டெட்டால் ஹேண்ட் வாஷில்  ‘கோரோனா’ வைரசுக்கு எதிராக செயல்புரியும் என்ற வாசகம் இருந்தபடியால் 2019 இல் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் இவர்களுக்கு முன்பே எப்படித் தெரிந்தது என்ற ‘அறிவுப்பூர்வமான’ வினா ஒன்றும் முன்வைக்கப்பட்டது. ஆனால் 2019 அடையாளம் காணப்பட்டது   COVID-19 மட்டுமே.

     எண்ணற்ற ‘கொரோனா’ வைரஸ்கள் உண்டு. 1960 களில் கண்டிபிடிக்கப்பட்ட இந்த வைரஸ்கள் கிரீடம் / மகுடம் (Crown) போன்று இதன் அமைப்பில் இருப்பதனால் ‘கோரோனா’ என்று பெயர் சூட்டப்படுகிறது. கொரோனாவிரிடியே (coronaviridae) குடும்பத்தைச் சேர்ந்த  இவை விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் சூனோடிக் (zoonotic) வகையைச் சார்ந்தது. 7 ‘கோரோனா’ வைரஸ்களில் 3 மனிதர்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துபவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. 

  1. SARS-CoV  Severe Acute Respiratory Syndrome (SARS): 2002 தென் சீனாவில் குவாங்டங் மாகாணத்தில் புனுகுப் பூனைகளிலிருந்து மனிதனுக்குப் பரவியது.
  2.  MERS-CoV was identified in  as the cause of Middle East Respiratory Syndrome (MERS): 2012 மத்தியக்கிழக்கில் சவுதி அரேபிய ஒற்றைத் திமில் ஒட்டகத்திலிருந்து வந்த ‘கோரோனா’ வைரஸ்.
  3. SARS-CoV2  novel coronavirus  2019 (COVID-19): 2019 சீனா வூபே மாகாணம், வூஹான் நகரில் பரவிய ‘கோரோனா’ வைரஸ் (novel coronavirus  2019)  COVID-19 (COronaVIrus Disease-2019)  என்று பெயரிடப்பட்டுள்ளது. வவ்வால்கள் அல்லது  எறும்புத்திண்ணிகளிடமிருந்து பரவியதாக மாறுபட்ட ஆய்வுகள் சொல்கின்றன; ஆய்வுகள் தொடர்கின்றன.
    தமிழகப் பாடநூல்களின் பெருமைகளில் ஒன்றாக 12 ஆம் வகுப்பு உயிரியல் பாடநூலில் இருப்பதாக ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு பரப்புபவர்கள் எதையும் தெளிவாகச் செய்வதில்லை. அந்தக் குறிப்பிட்ட பக்கத்தைக்கூட முழுமையாக படமெடுக்காமல் பரப்புகின்றனர். இதிலிருந்தே இவை உண்மையிலிருந்து வெகுதூரம் விலகியது என்பதை நமக்கு உணர்த்துகின்றன.


   உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல் என்ற  short version னும், தாவரவியல், விலங்கியல் long version னும், +2 உயிரியலில் உண்டு. இதில் இவர்கள் குறிப்பிடும் சாதாரண சளி (common cold) எதில் உள்ளது என்கிற குறிப்பில்லை. இதன் மூலமும் வதந்தி பரப்புவோரின் நோக்கத்தை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். 

     இவர்கள் வெளியிடும் பக்கத்தில் ‘Common cold’ எனும் தலைப்பில் கீழ்க்கண்ட பத்திகள் காணப்படுகின்றன. இவை எந்த வகுப்புப் பாடநூலில் இருக்கிறது என்று தெரியவில்லை. (அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.)  ஆனால் பின்வரும் இணைப்பிலிருந்து வரிக்குவரி வெட்டி ஒட்டும் வேலை நடந்திருப்பது புலனாகிறது. 

    The Common cold (also known as nasopharyngitis, acute viral rhinopharyngitis, acute coryza, or a cold) (Latin: rhinitis acuta catarrhalis) is a viral infectious disease of the upper respiratory system, caused primarily by rhinoviruses and coronaviruses. Common symptoms include a cough, sore throat, runny nose, and fever. There is currently no known treatment that shortens the duration; however, symptoms usually resolve spontaneously in 7 to 10 days, with some symptoms possibly lasting for up to three weeks.

   The common cold is the most frequent infectious disease in humans with the average adult contracting two to four infections a year and the average child contracting between 6 12.
(…)
The best prevention for the common cold is staying away from people who are infected, and places where infected individuals have been.
(…)
  Hand washing with plain soap and water is recommended. The mechanical action of hand rubbing with plain soap, rinsing, and drying physically removes the virus particles off the hands.

 Alcohol-based hand sanitizers provide very little protection against upper respiratory infections, especially among children.


       12 விலங்கியல்  பாடத்தில் கீழ்க்கண்ட பகுதிகள் இடம்பெறுகிறது. சாதாரண சளி (Common cold) அட்டவணையில் மட்டுமே இடம்பிடிக்கிறது. 

     “நிபா வைரஸ் (Nipah virus) என்பது  ஒரு சூனோடிக் (zoonotic) வைரஸ்  (விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு  பரவக்கூடியது) ஆகும். இது தொற்று கலந்த உணவின் மூலம் பரவுகிறது. இவ்வைரஸ்  தொற்றிய மக்களிடம், அறிகுறிகளற்ற தொற்று முதல், தீவிர சுவாச நோய் மற்றும்  இறப்பை ஏற்படுத்தக்கூடிய மூளைவீக்க  நோய் வரையிலான பல்வேறு நோய்கள்  தோன்றுகின்றன.

     பன்றிக்காய்ச்சல்  முதன்முதலில் 1919 ஆம்  ஆண்டு தொற்று நோயாக அ ங் கீ க ரிக்கப்ப ட் டு ,  இன்றள வு ம்  பருவக்காலங்களில் ஏற்படும் காய்ச்சலாக அறியப்படுகிறது. H1N1 வைரஸ் மூலம்  பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல்,  இருமல், தொண்டை வலி, குளிர், வலுவிழத்தல்  மற்றும் உடல்வலி போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். குழந்தைகள், கருவுற்ற பெண்கள் மற்றும் வயதானவர்களில் ஏற்படும்  கடுமையான தொற்று, அபாய நிலையை ஏற்படுத்தும்”. (பக்.147, 12 விலங்கியல்)

    நிஃபா வைரஸ் (Nipah virus)  ஒரு சூனோடிக் (zoonotic) வைரஸ் என்றபோதிலும் இது கொரோனா வைரஸ் வகையைச் சார்ந்ததல்ல. இது பாராமிக்ஸோவிரிடியே (paramyxoviridae) குடும்பத்தைச் சேர்ந்தது. பாடநூலில் போடப்பட்டுள்ள படம் சரியா என்ற கேள்வியும் எழுகிறது. 

      பாடநூல்கள் தொடர்ந்து அப்துல்கலாம் புகழ்பாடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன, கூடவே கற்பிதங்களையும் பொய்மைகளையும் பரப்புகின்றன. ஏழாம் வகுப்பு அறிவியலில் இது படக்கதை வடிவில் தொடர்கிறது. அறிவியல் அறிஞருக்கும் (Scientist) தொழில்நுட்ப வல்லுநருக்கும் (Technocrat) உள்ள வேறுபாட்டை அறிவியல் பாடங்கள் உணராதது வியப்பு. (இது குறித்து அடுத்த பதிவில் விரிவாக.)

    விக்கிபீடியா இணையதள மேற்கோள் இணைப்பில் காட்டப்படும், வேறுசில பக்கங்களிலும் கிடைக்கும்  ஒரு கட்டுரை அப்படியே காப்பியடிக்கப்பட்டு இந்த படக்கதையில் இடம் பெறுகிறது.




     “இந்தியாவின் ஏவுகணை நாயகன் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் (1931-2015)” எனும் தலைப்பிலான படக்கதையில் இடம் பெறுபவைகளில் சில:

   “1983 ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்பு  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்  தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சக  அறிவியல் ஆலோசகராகவும் கலாம்  பொறுப்பேற்றார்”. (பக்.46)

     “கலாம், 1980 ஆம் ஆண்டு இந்தியாவின்  முதல் செயற்கைக்கொள் எஸ்.எல்.வி.3  என்ற செயற்கைக்கொள் செலுத்தியினைப்  பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார்.  இந்திய இராணுவத்தில உள்ள திரிசூல் (Thrilshul),  அக்னி (Agni), பிருத்வி (Prithvi), நாக் (Nag)  மற்றும் ஆகாஷ் (Akash) ஆகிய ஏவுகணைகள்  வடிவமைக்கப்பட்ட போது அதன் திட்ட  இயக்குநராகவும் செயல்பட்டார். இந்தியாவில முதன்முறையாக 1974 ஆம் ஆண்டு  “சிரிக்கும் புத்தர்“ என்ற திட்டத்தில் அணுவெடிப்புச்  சோதனை நிகழ்ந்தது. இந்த நிகழ்வின்போது  அறுபது விண்வெளி பொறியியல் அறிஞர்களின்  பங்களிப்பு இருந்தது. இதில் கலாமும் ஓர் உறுப்பினர் ஆவார்”.

     “அப்துல் கலாம் 1999 ஆம் ஆண்டு “ஆப்ரேசன்  சக்தி” என்ற திட்டத்தில் பொக்ரான்  அணுவெடிப்புச் சோதனையில் முக்கிய  பங்காற்றியுள்ளார். இவரே, இந்தியாவை அணு  ஆயுத வல்லரசாக மாற்றிய பெருமைக்குரியவர்”.

    “கலாம் ஐந்து ஏவுகணைத் திட்டங்களில்  பணிபுரிந்துள்ளார். இவரே இந்திய ராணுவ  ராக்கெட் வடிவமைப்பின் முதன்மையாளராகவும்  வி்ளங்கினார்”.

    “இந்தியாவின் உயரிய விருதான “பாரத  ரத்னா” விருது, மத்திய அரசால் இவருக்கு  வழங்கப்பட்டது. மேலும், இந்தியாவில் 2002  முதல் 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத்  தலைவராகவும் இருந்தார்”. (பக்.47)

    குழுவினரின் செயல்பாடுகள், சாதனைகள் தனி ஒருவரின் சாதனையாக ஏற்றப்படுவதைக் கவனிக்கவும். அன்று டாடாவின் உறவினரான ஹோமி ஜஹாங்கீர் பாபாவை முன்னிறுத்த மேகநாத் சாஹா போன்ற விஞ்ஞானிகள் ஒதுக்கப்பட்டனர். இன்று அப்துல் கலாமிற்காக ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய், ராஜா ராமன்னா போன்ற அணுசக்தித்துறை முன்னோடிகள் புறந்தள்ளப்படுகின்றனர். 

    “இந்தியாவை அணு  ஆயுத வல்லரசாக மாற்றிய பெருமைக்குரியவர்”, என்று எழுதுகிறார்கள். இதுவே அபத்தம். அப்ப பாகிஸ்தானும் அணு வல்லரசுதானே! அப்துல்கலாமைப் பற்றி நேர்மையாக அறிமுகம் செய்ய இவர்களிடம் தகவல்கள் இல்லாதது ஏன்? ஏதோ ஒன்றைப் பிரதியெடுக்கும் அவலம் எப்படி வந்தது? 

    அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக வல்லரசு வெறியூட்டியதுபோக, கல்விப்புலத்திலும் அப்துல்கலாம் தொடங்கி வைத்த வல்லரசு வெறியூட்டல்கள் இந்த ‘கோரோனா’விற்கு பிறகேனும் தொடர அனுமதிக்க வேண்டாம். ஒவ்வொரு முன்னேறிய நாடுகளின் ராணுவ பட்ஜெட் வீங்கிய அளவிற்கு மருத்துவத்துறைக்கு ஒன்றுமேயில்லை என்பதை இன்று உலகமே உணர்ந்துள்ளது. மருத்துவத்துறையில் இன்று உலகில் முன்னணியில் உள்ள கியூபா ஒரு வல்லரசு அல்ல. 

    ஒரு காலத்தில் வல்லரசுக்கான தேவை இருந்திருக்கலாம். அவற்றிற்கான தேவை இன்று ஒழிந்து போயுள்ளது. புதுப்புது கொள்ளை நோய்கள், காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்சினைகள், இயற்கைப் பேரிடர்கள் என மனித சமுதாயம் நிறைய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இவற்றை அணு ஆயுதங்கள் மற்றும் போர்த்தளவாடங்களால் எதிர்கொள்ள இயலாது. வெறும் கற்பனை எதிரிகளுடன் வாள் சுழற்றியது போதும்; நடைமுறை வாழ்க்கையை உணருங்கள்; ஆட்சியாளர்களுக்கும் உணர்த்துங்கள். இளம் பிஞ்சுகளை இனியும் வல்லரசு வெறியூட்டி வளர்க்காதீர்கள்.  

   மாணவர்களிடம் கட்டுரை எழுதச்சொன்னால் அவர்கள் எதையாவதுப் பார்த்து எழுதி வருவர். அதைப்போல பாடநூல் எழுதுபவர்கள் எதையும் படிக்காமல் இணையப் பக்கங்களிலிருந்து அடிபிறழாமல் ‘காப்பியடிப்பதை’ என்ன செய்வது? இதுதான் வல்லரசு வேலை போலும்! 

     மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT), தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை ஆகியன இதற்காக வெட்கப்படவேண்டும். தொடர்ந்து வரும் அறிவுத்திருட்டையும் பொய்மைகளையும் இனியாவது விரட்டவேண்டும்.
   
(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக